இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்துவும், ஸ்ரீகாந்தும் வெற்றியுடன் தொடங்கினர். மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாயும் முதல் சுற்றில் வென்றார்.
கடந்த 2 முறை நடைபெற்ற இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியிலும் பி.வி.சிந்து இறுதிச்சுற்று வரை முன்னேறினார். 2017இல் சாம்பியன் பட்டம் வென்றார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சக நாட்டவரான முக்தா ஆக்ரேவை எதிர்கொண்டார் சிந்து.
முதல் செட்டில் 21-8 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-13 என்ற கணக்கிலும் வசப்படுத்தினார் சிந்து.
ஆடவர் பிரிவில், 2015ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வோங் விங் கி வின்சென்டை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், 2ஆவது செட்டை 18-21 என்ற கணக்கில் பறிகொடுத்தார்.
இதனால், 3ஆவது மற்றும் கடைசி செட் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. அதில், 21-19 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார் ஸ்ரீகாந்த்.
ஹெச்.எஸ்.பிரணாய், 14-21, 21-18, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் கே.வாங்சாரோனை வீழ்த்தினார்.