க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் விராட் கோலி போன்று உருவெடுப்பார் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சமீபகாலங்களில் க்ளென் மேக்ஸவெல் ஆட்டம் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் நன்கு ஜொலித்தார்.
பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். எனவே டி20, ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற சவால் மேக்ஸ்வெல்க்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் டெஸ்ட் போட்டிகளிலும் சாதிக்க வேண்டும்.
நாம் அனைவரும் தற்போது விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து வருகிறோம். ஒருநாள் போட்டிகளில் கோலியின் சராசரி 60-ஆக உள்ளது. அவர் உலகின் மிகச்சிறந்த வீரராக திகழ்கிறார். அதேபோன்ற திறமை மேக்ஸ்வெல்லிடமும் உண்டு. எனவே அவர் தொடர்ந்து தீவிரமாக பயிற்சி செய்ய வேண்டும். அப்போது அதற்கான பலன்களும் கிடைக்கும்.
பேட்டிங், ஃபீல்டிங் என களத்தில் மேக்ஸ்வெல்லின் ஆற்றல் மிகச்சிறப்பானதாக உள்ளது. அது ஆஸ்திரேலிய அணிக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைகிறது என்று தெரிவித்தார்.