இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை-மும்பை அணிகள் மோதும் குவாலிபையர்-1 ஆட்டத்துடன் தொடங்குகிறது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் 2019 சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலா 8 அணிகளும் 14 ஆட்டங்களில் விளையாடின. இதில் முதலிடம் பெற்ற மும்பை, இரண்டாவது இடத்துடன் சென்னை, மூன்றாவது இடத்துடன் தில்லி, நான்காம் இடத்துடன் ஹைதராபாத் ஆகியோர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கடைசி இடத்தையே பெற முடிந்தது.
மும்பையிடம் வீழ்ந்ததால், கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதை விட நல்ல ரன் விகிதம் கொண்ட ஹைதராபாத் தகுதி பெற்றது. தில்லி கேபிடல்ஸ் அணியுடன் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதுகிறது ஹைதராபாத்.
4-ஆவது பட்ட முனைப்பில் சென்னை-மும்பை
குவாலிபையர்--1-இல் மோதவுள்ள சென்னை--மும்பை அணிகள் தங்களது நான்காவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல காத்துள்ளன. அதே நேரத்தில் தில்லி அணி கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பின் தற்போது தான் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. தொடர்ந்து 4-ஆவது முறையாக பிளே ஆஃபில் நுழைந்துள்ள ஹைதராபாத் 2-ஆவது பட்டத்தை வெல்ல காத்துள்ளது.