இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தொடரில் நான் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
நான், இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவேண்டும் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் சங்கம் என்னைக் கேட்டுக்கொண்டது. ஆனால் நான் விளையாடப் போவதில்லை. இளைஞர்களுடன் இணைந்து நான் விளையாட வேண்டும் என விருப்பப்பட்டார்கள். ஆனால், இந்த வருடம் நான் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளப் போகிறேன். இந்தியா தொடர் மட்டுமல்லாமல் பிக் பேஷ் லீக், பிபிஎல் டி20 போட்டி ஆகியவற்றிலும் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் எம்எஸ்எல் டி20 போட்டியில் 6 இன்னிங்ஸில் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார் கெயில். இதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த ஓய்வின் மூலம் அடுத்த வருடம் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.