ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து ஐசிசி வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதாகக் கூறி லண்டனில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில்,
ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக அவசர நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. கிரிக்கெட்டில் அரசு தலையீடு இருக்கக் கூடாது என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது. ஆனால், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய அளவில் அரசின் தலையீடுகள் உள்ளன. கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணித் தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகின்றன.
எனவே ஐசிசியின் கொள்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதை விரும்பவில்லை. அதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிதியுதவி உடனடியாக நிறுத்தப்படுகிறது.
விதிகளின் அடிப்படையில் மட்டுமே ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர வேண்டும் என ஐசிசி விரும்புகிறது என்று தெரிவித்தார்.