பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இம்ரான் நாசிர், சேவாக்கை விடவும் திறமையானவர், ஆனால் மூளை கிடையாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்.
தொலைக்காட்சிப் பேட்டியில் அக்தர் கூறியதாவது:
சேவாக்கிடம் உள்ள மூளை இம்ரான் நாசிரிடம் இல்லை என நினைக்கிறேன். அதேபோல இம்ரான் நாசிரிடம் உள்ள ஆட்டத்திறன் சேவாக்கிடம் இல்லை என்றும் நினைக்கிறேன். நாசிரை பாகிஸ்தான் சரியாகப் பயன்படுத்திகொள்ளவில்லை. அப்படிப் பயன்படுத்தியிருந்தால் சேவாக்கை விடவும் திறமையான வீரர் கிடைத்திருப்பார்.
இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்தார் நாசிர். இதையடுத்து நாசிரைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கேட்கவில்லை.
நம் வீரர்களின் திறமையை நம்மால் பயன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால் சேவாக்கை விடவும் திறமையான வீரர் நமக்குக் கிடைத்திருப்பார். எல்லா ஷாட்களும் அவரிடம் உண்டு, நல்ல ஃபீல்டரும் கூட. அவரைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
நாசிர் 8 டெஸ்டுகள், 79 ஒருநாள், 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.