2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க ஐசிசி முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு ஆதரவளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ஆமதாபாத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டுப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்ப்பது பற்றிய முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ. இதன்படி, 2022 ஐபிஎல்-லில் இருந்து கூடுதலாக 2 அணிகளைச் சேர்த்து மொத்தமாக 10 அணிகளுடன் ஐபிஎல் போட்டியை நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கான தனது ஆதரவை பிசிசிஐ வெளிப்படுத்தியுள்ளது.
2021 ஒலிம்பிக்ஸ் டோக்கியோவிலும் 2024 ஒலிம்பிக்ஸ் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளன. 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க ஐசிசி அமைப்பு முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து சில விளக்கங்களைப் பெற்ற பிறகு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் டி20 போட்டி வடிவில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கான ஐசிசியின் முயற்சிக்கு ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.