மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்து 170 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மார்க் வுட் 2 ரன்களுக்கு கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ஆர்ச்சர் கடைசி கட்டத்தில் இங்கிலாந்துக்குத் தேவையான முக்கிய ரன்களை எடுத்தார். 23 ரன்கள் எடுத்த அவர் கேப்ரியல் பந்தில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். எனவே, இங்கிலாந்து அணி 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் சுமார் 88 ஓவர்கள் வரை வீசப்படவுள்ளன. எனவே, மேற்கிந்தியத் தீவுகளின் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷேனான் கேப்ரியல் 5 விக்கெட்டுகளையும், ராஸ்டன் சேஸ் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.