இந்திய வீரர்களுக்குக் கிடைத்துள்ள கட்டாய ஓய்வு வரவேற்கக் கூடியது: ரவி சாஸ்திரி பேட்டி

நாங்கள் இங்கு வந்த நாளிலிருந்து தான் விமான நிலையங்களில் பயணிகளைப் பரிசோதனை செய்ய...
இந்திய வீரர்களுக்குக் கிடைத்துள்ள கட்டாய ஓய்வு வரவேற்கக் கூடியது: ரவி சாஸ்திரி பேட்டி
Updated on
1 min read

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 27,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 800 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

நியூஸிலாந்து தொடரின் இறுதியில் இந்திய வீரர்கள் சோர்வாக இருந்தார்கள். காயங்கள், குறைவான உடற்தகுதி என இருந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள ஓய்வு அவர்களுக்கு நல்லதாகவே அமையும். கடந்த 10 மாதங்களில் இந்திய அணி வீரர்கள் அதிகமான ஆட்டங்களில் விளையாடியுள்ளார்கள். அதன் பாதிப்பு சமீபத்தில் தெரிந்தது. நானும் இதர பயிற்சியாளர்களும் மே 23 அன்று உலகக் கோப்பைக்காக இந்தியாவிலிருந்து கிளம்பினோம். அதன்பிறகு நாங்கள் வீட்டில் 10,11 நாள்கள் தான் இருந்தோம்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இங்கிலாந்திலிருந்து மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்றோம். அதன்பிறகு இந்தியாவில் இரண்டரை மாதங்கள் ஆடினோம். பிறகு நியூஸிலாந்துக்குச் சென்றோம். எனவே தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வு வரவேற்கக்கூடியது. நியூஸிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சரியான சமயத்தில் திரும்பினோம். நாங்கள் இங்கு வந்த நாளிலிருந்து தான் விமான நிலையங்களில் பயணிகளைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com