இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. தனஞ்ஜெயா டி சில்வா 91 ரன்களும் தசுன் ஷனகா 47 ரன்களும் எடுத்தார்கள். சாம் கரண் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். டேவிட் வில்லி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. ஜேசன் ராய் 60 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 68, கேப்டன் மார்கன் 75 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
இந்த வெற்றியினால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் ஜூலை 4 அன்று நடைபெறுகிறது.