எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

4-வது டெஸ்ட்: அக்‌ஷர், அஸ்வின் சுழலில் 205 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணி!

அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

News image
Updated On :4 மார்ச் 2021, 10:35 am

DIN

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றுள்ளார்கள்.

6-வது ஓவரை அக்‌ஷர் படேல் வீச வந்தார். 2-வது பந்திலேயே டாம் சிப்லியை போல்ட் செய்தார். சிப்லி 2 ரன்கள் மட்டும் எடுத்தார். அக்‌ஷர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, 9 ரன்களில் ஆட்டமிழந்தார் கிராவ்லி. இதன்பிறகு கேப்டன் ரூட்டை 5 ரன்களில் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் சிராஜ். ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சிராஜ் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். 

பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்தக் கூட்டணி 44 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது.

முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 28, ஸ்டோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

Story image

உணவு இடைவேளைக்குப் பிறகு பேர்ஸ்டோவை 28 ரன்களில் வீழ்த்தினார் சிராஜ். நன்கு விளையாடி அரை சதமெடுத்த பென் ஸ்டோக்ஸ், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் 5 விக்கெட்டுகளைக் குறைந்த ரன்களில் வீழ்த்தியதால் இந்திய பந்துவீச்சாளர்கள் உற்சாகம் ஆனார்கள்.

இதையடுத்து முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 56 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. போப் 21, டான் லாரன்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு போப்பின் விக்கெட்டை மீண்டும் வீழ்த்தினார் அஸ்வின். போப் 29 ரன்கள் எடுத்தார். நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பென் ஃபோக்ஸ் 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் எடுத்தார் அக்‌ஷர் படேல். லாரன்ஸ் 46 ரன்களிலும் டாம் பெஸ் 3 ரன்களிலும் அக்‌ஷர் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். 

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு இப்போதுதான் இங்கிலாந்து அணி 200 ரன்களைக் கடந்தது. ஜாக் லீச், 7 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.