இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கான்பூர் மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் ஷிவ் குமார், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்தைத் தயாரிக்கும்படி பிசிசிஐயிடமிருந்தோ இந்திய அணி நிர்வாகத்திடமிருந்தோ எனக்கு உத்தரவு எதுவும் வரவில்லை. ஒரு நல்ல ஆடுகளத்தைத் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நவம்பர் மாதத்தில் ஆடுகளத்தின் கீழே ஈரத்தன்மை இருக்கும். எனினும் இது உறுதியான ஆடுகளம். அவ்வளவு சுலபத்தில் விரிசல் அடையாது. சமீபகாலமாக மூன்று நாள்களில் டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்து விடுகின்றன. அதற்குக் காரணம் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக டி20 கிரிக்கெட் மனநிலையுடன் பேட்டர் விளையாடுகிறார்கள். இந்த டெஸ்ட் ஆட்டம் மூன்று நாள்களில் முடிவடையாது என்பதில் நம்பிக்கையாக உள்ளேன் என்றார்.