தோனியின் ட்விட்டரில் ப்ளூ டிக் நீக்கம்: காரணம் என்ன?
கிரிக்கெட் வீரர் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி கேப்டனான தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படும். அதுபோல தோனியின் ட்விட்டர் கணக்குக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் பலரும் ட்விட்டரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். சிலர் இன்னும் வேடிக்கையாக, தோனி சிஎஸ்கேவுக்கு விளையாடுவதால் ப்ளூ டிக்குக்குப் பதிலாக யெல்லோ டிக் வழங்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.
தனது ட்விட்டர் கணக்கில் கடைசியாக ஜனவரி 8 அன்று ட்வீட் வெளியிட்டுள்ளார் தோனி. அதற்குப் பிறகு ஒரு ட்வீட்டும் வெளியிடாததால் இந்தக் காரணத்துக்காக ப்ளூ டிக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்க வாய்ப்புள்ளது. தோனியின் கடைசி இரு ட்வீட்கள் 2021 ஜனவரி 8, 2020 செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் வெளிவந்துள்ளன.
ப்ளூ டிக் வழங்குவது பற்றி ட்விட்டரின் விளக்கம்: அதிகாரபூர்வமான கணக்கு என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காக ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. ப்ளூ டிக் கிடைப்பதற்கு உங்களுடைய கணக்கு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டும், குறிப்பிடத்தக்க, அதிகாரபூர்வமானதாக இருக்க வேண்டும்.