ஆஷஸ் தொடரில் நால்வருக்கு கரோனா பாதிப்பு

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மீண்டும் நடைபெற்று அதன் முடிவுகள் கிடைத்த பிறகு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளன்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அணியின் இரு பணியாளர்கள், பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தமாக நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வருவதற்கு முன்பு அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதியான பிறகு அரை மணி நேரமாக தாமதமாக 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டம் முடிந்த பிறகு அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

கோவிட் 19 ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனையின் முடிவில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதையடுத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் என குழுவில் உள்ள அனைவருக்கும் ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்து அணியினருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மைதானத்தில் இரு அணி வீரர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பார்கள். நிலைமையை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் எம்சிசியும் கவனித்து வருகிறது. விக்டோரியன் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 26 அன்று 57,818 பேரைப் பரிசோதித்ததில் 1999 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விக்டோரிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுதவிர, சேனல் செவன் தொலைக்காட்சி வர்ணனைக் குழுவிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வர்ணனைக் குழுவில் உள்ள ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ரிக்கி பாண்டிங், இயன் போத்தம் என வர்ணனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பரிசோதனை முடிவில் கரோனா இல்லை என்று தெரிந்தால் மட்டுமே மீண்டும் வர்ணனை செய்ய வருவார்கள். இதையடுத்து வேறொரு வர்ணனைக் குழு களத்தில் இறங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com