சாதிய வன்மத்துடன் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மாவும் யுவ்ராஜ் சிங்கும் இன்ஸ்டகிராமில் உரையாடல் நிகழ்த்தினார்கள். அப்போது இந்திய சுழற்பந்துவீச்சாளர் சஹாலின் டிக்டாக் ஆர்வம் பற்றி இருவரும் பேசினார்கள். அதில் யுவ்ராஜ் சிங் பயன்படுத்திய ஒரு வார்த்தை சஹாலை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகச் சர்ச்சை எழுந்தது.
பட்டியல் இன மக்களை இழிவுபடுத்திப் பேசியதாக யுவ்ராஜ் சிங் மீது ஹரியாணா மாநிலத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். யுவ்ராஜ் மீது ஹரியாணா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள்.
பிறகு, தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் யுவ்ராஜ் சிங். ட்விட்டரில் அவர் கூறியதாவது: எவ்விதமான ஏற்றத்தாழ்விலும் நம்பிக்கையில்லாதவன் நான். அது சாதி, மதம், நிறம், பாலினம் என எதுவாக இருந்தாலும். மக்களின் நலனுக்காகவே என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். என் நண்பர்களுடனான உரையாடலில் என்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அது தேவையற்றதாகும். ஒரு பொறுப்புள்ள இந்தியனாக நான் கூற விரும்புவது - உள்நோக்கமின்றி, யாருடைய உணர்வுகளையாவது நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி யுவ்ராஜ் சிங்கைக் கைது செய்ததாகவும் சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவித்ததாகவும் ஹரியாணாவின் ஹன்சி பகுதி காவல்துறையைச் சேர்ந்த நிதிகா தகவல் தெரிவித்தார்.