30 வயதில் ஓய்வு பெற்றார் பிரபல இந்திய ஹாக்கி வீரர்

இந்திய ஹாக்கி அணியின் பிரபல வீரர் ருபிந்தர் பால் சிங் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ருபிந்தர் பால் சிங்
ருபிந்தர் பால் சிங்

இந்திய ஹாக்கி அணியின் பிரபல வீரர் ருபிந்தர் பால் சிங் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி வெண்கலம் வென்று சாதனை படைத்தது. 1980-க்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெற்ற ஒலிம்பிக் பதக்கம் என்பதால் இந்திய ரசிகர்களும் பிரபலங்களும் ஹாக்கி வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.

2010-ல் இந்திய ஹாக்கி அணி வென்ற சுல்தான் அஸ்லான் ஷா போட்டியில் அறிமுகமானார் ருபிந்தர் பால் சிங். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டி, 2016 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளை இந்திய அணி வென்றபோது அந்த அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். 2018-ல் அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் மீண்டும் அணியில் இடம்பிடித்து டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றார். 

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விளையாடிய 30 வயது ருபிந்தர் பால் சிங், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:

இந்திய ஹாக்கி அணியிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களைக் கடந்த சில மாதங்களாக அனுபவித்து வருகிறேன். டோக்கியோவில் என்னுடைய அணி வீரர்களுடன் இணைந்து பதக்கம் பெற்றது என் வாழ்க்கையின் அற்புதமான தருணம். அதை எப்போதும் மறக்கமாட்டேன். கடந்த 13 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடிப் பெற்ற அனுபவங்களை இளம் வீரர்களும் திறமைசாலிகளும் பெற வேண்டும் என எண்ணுகிறேன். இந்திய அணியின் உடையை அணிந்து 223 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இந்திய அணிக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற திருப்தியுடன் அணியிலிருந்து விலகுகிறேன் என்று கூறி அணி வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com