கிளாசன் அதிரடி: இந்தியா மீண்டும் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
கிளாசன் அதிரடி: இந்தியா மீண்டும் தோல்வி


இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

149 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினார். புவனேஷ்வர் குமார் சிறப்பாகப் பந்துவீசி முதல் ஓவரில் ஹென்ட்ரிக்ஸை போல்டாக்கினார். தனது 2-வது ஓவரில் ட்வைன் பிரிடோரியஸையும், 3-வது ஓவரில் ரசி வான்டர் டுசனையும் ஆட்டமிழக்கச் செய்தார் புவனேஷ்வர் குமார். இதனால், ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பவர் பிளே முடிந்தவுடன் யுஸ்வேந்திர சஹாலை அறிமுகப்படுத்தினார் ரிஷப் பந்த். அவரும், ஹர்ஷல் படேலும் சிறப்பாகவே பந்துவீசினார்.

இதையடுத்து, சஹால் மீண்டும் 9-வது ஓவரை வீசினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஹெயின்ரிக் கிளாசன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து நெருக்கடியை சற்று தணித்தார்.

இந்த ஆட்டத்தைப் பார்த்து பவுமா பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தர, கிளாசன் அதிரடியைக் கையிலெடுத்தார். அக்சர் படேல் வீசிய அவரது முதல் ஓவரிலேயே கிளாசன் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாச தென்னாப்பிரிக்கா 19 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், சஹால் சுழலில் பவுமா (35) ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கிளாசன் 32-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார். டேவிட் மில்லர் நிதானிக்க, கிளாசன் வெற்றி இலக்கை நோக்கி ஆடினார்.

இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் படிப்படியாக 5-க்கு கீழ் குறைந்தது. குறிப்பாக சஹால் வீசிய 17-வது ஓவரில் மில்லர் ஒரு சிக்ஸரும், கிளாசன் 2 சிக்ஸர்களும் பறக்கவிட கடைசி 4 ஓவர்களில் தென்னாப்பிரிக்க வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருப்பார் எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் 81 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.  18-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் மீண்டும் ஒரு விக்கெட்டை (வெய்ன் பார்னெல்) வீழ்த்தினார்.

ஆனால், டேவிட் மில்லர் பதற்றமில்லாமல் வெற்றி இலக்கை அடையச் செய்தார்.

18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இருஅணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com