ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரபல வீரர் கிரோன் பொலார்ட் அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர் பொலார்ட். மேலும் டி20 கிரிக்கெட்டில் 600 ஆட்டங்களை விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையைச் சமீபத்தில் படைத்தார்.
2010 முதல் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொலார்ட். 13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய பொலார்ட், 5 முறை ஐபிஎல் கோப்பையை மும்பை வெல்ல உதவியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பொலார்ட் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியதாவது:
இந்த முடிவை எடுப்பது சுலபமாக இல்லை. ஏனெனில் இன்னும் சில வருடங்களுக்கு விளையாட நான் தயாராக இருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். என்னால் மும்பை அணிக்குத் தொடர்ந்து விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் விளையாட முடியாது. மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான்.
எனினும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன். எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளேன். நாங்கள் ஒன்றிணைந்து 2011, 2013-ல் சாம்பியன் லீக்கையும் 2013, 2015, 2017, 2019, 2020 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து பொலார்ட் ஓய்வு பெற்றிருப்பது மும்பை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மும்பை அணியின் பெரிய பலமாக இருந்தவர் பொலார்ட். ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக 189 ஆட்டங்களில் பொலார்ட் விளையாடியுள்ளார். 16 அரை சதங்களுடன் 3412 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 147.32. 223 சிக்ஸர்கள்.