பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அஃப்ரிடியின் பந்துவீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை இன்னும் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்ற நிலையில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியினை இந்தியா எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், இந்திய வீரர்கள் ஷகீன் அஃப்ரிடியின் பந்துவீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வருகிற அக்டோபர் 23 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதனாத்தில் தங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளன.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷகீன் அஃப்ரிடி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கேம் பிளான் நிகழ்ச்சியில் கௌதம் கம்பீர் கூறியதாவது: “முழங்கால் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் விலகி இருந்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அஃப்ரிடி அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகை இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும். ஷகீன் அஃப்ரிடியின் பந்து வீச்சை கடந்து செல்ல நினைக்காமல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடித்து அதிரடியாக வேண்டும். அவரது பந்துவீச்சில் ரன்களைக் குவிக்கும் மனநிலையில் விளையாட வேண்டும். புதிய பந்தில் அவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தானது. இருப்பினும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதனை கவனமாக எதிர்கொண்டு ரன்களை குவிக்க வேண்டும்.” என்றார்.