பிரக்ஞானந்தா போன்ற இந்திய வீரர்களால் செஸ் உலக சாம்பியனாகவும் வர வாய்ப்புள்ளது எனப் பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் ஆனந்த் கூறியதாவது:
கார்ல்சன் போன்ற ஒரு வீரரைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. பிரக்ஞானந்தா அதைச் செய்திருக்கிறார். அவரிடம் திறமை உள்ளது. பிரக்ஞானந்தாவைப் போன்ற வீரர்கள் தங்களுடைய திறமையால் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க முடியும்.
பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருனாக் சத்வனி, குகேஷ், ஆர். வைஷாலி உள்ளிட்ட வீரர்களுக்கு நான் தற்போது பயிற்சியளித்து வருகிறேன். அனைவரிடமும் நல்ல திறமை உள்ளது. நல்ல வழிகாட்டுதலில் அவர்களால் உலகின் சிறந்த 10 செஸ் வீரர்களில் ஒருவராக வர முடியும். அவர்களால் உலக சாம்பியனாகவும் ஆக முடியும் என்றார்.
சமீபத்தில், இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன. விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிரிஷ்ணா, பிரக்ஞானந்தா என மூன்று இந்தியர்கள் மட்டுமே இதுவரை கார்ல்சனைத் தோற்கடித்துள்ளார்கள். கார்ல்சனைத் தோற்கடித்த இளம் வீரர் என்கிற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.