இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக 50 ரன்கள் எடுத்திருக்கவேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை.
பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
முதல் நாள் முடிவில் தெ.ஆ. அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 8 ரன்களும் நைட் வாட்ச்மேன் மஹாராஜ் 6 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். எல்கரை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பற்றி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியதாவது:
மிகவும் சவாலான சூழலில் ரன்கள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. முதல் இன்னிங்ஸில் நாங்கள் சற்று குறைவான ஸ்கோரையே எடுத்துள்ளோம். இன்னும் 50, 60 ரன்களைக் கூடுதலாக எடுத்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் அதைத்தான் எதிர்பார்த்தோம். விராட் கோலி அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். புஜாராவும் நன்கு விளையாடினார். காலையில் தெ.ஆ. அணி அபாரமாகப் பந்துவீசியது. காலையில் மேகமூட்டமாக இருந்ததால் பேட்டிங்குக்குச் சவாலாக இருந்தது. எதிரணிக்கு எளிதாகச் சில விக்கெட்டுகளை வழங்கியுள்ளோம். அதைத் தவிர்த்திருக்கலாம் என்றார்.