இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் தேநீர் இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2-ம் நாள் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.
கீகன் பீட்டர்சன் 40 ரன்களுடனும், வான் டர் டுசென் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையும் படிக்க | வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் ஜெயந்த் யாதவ்: இந்திய அணியில் மாற்றம்
உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். டுசென் 21 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, தெம்பா பவுமாவுடன் இணைந்து பீட்டர்சன் பாட்னர்ஷிப் அமைத்தார். பீட்டர்சன் அரைசதம் கடந்து நம்பிக்கையளித்தார். ஆனால், 28 ரன்கள் எடுத்திருந்த பவுமாவை முகமது ஷமி வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய கை வெரீனையும் அதே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார் ஷமி.
7 ரன்கள் எடுத்த மார்கோ ஜான்செனை ஜாஸ்பிரித் பும்ரா போல்டாக்கினார். ஜான்சென் விக்கெட்டுடன் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.
தேநீர் இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 62.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 47 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்திய அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.