ஆஸ்திரேலியன் ஓபன்: விடை பெற்றார் சானியா மிர்சா
By DIN | Published On : 25th January 2022 01:25 PM | Last Updated : 25th January 2022 01:25 PM | அ+அ அ- |

கலப்பு இரட்டையர் ஆட்டத்தின் காலிறுதியில் தோல்வியடைந்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குப் பிரியாவிடை அளித்துள்ளார் பிரபல வீராங்கனை சானியா மிர்சா.
ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. கடந்த வருடம் செப்டம்பரில் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார்.
இந்த வருடத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார் சானியா மிர்சா. 2022 ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் நாடியாவுடன் இணைந்து விளையாடி தோல்வியடைந்தார். அடுத்ததாக ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார்.
இதுவே எனது கடைசிப் பருவம் என முடிவெடுத்துள்ளேன். ஒவ்வொரு வாரமாகக் கடந்து வருகிறேன். முழுப் பருவமும் விளையாடுவேனா எனத் தெரியாது. ஆனால் விளையாட நினைக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. என் மகனுக்கு மூன்று வயது. இந்த வயதில் அவனை என்னுடன் அழைத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் செல்கிறேன். இதை நான் மனத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய உடல் சோர்வடைந்து வருகிறது. வயது அதிகமாவதால் காயமானால் உடனடியாக அதிலிருந்து குணமாக முடிவதில்லை என்று சமீபத்தில் பேட்டியளித்தார் சானியா மிர்சா.
இந்நிலையில் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சானியா மிர்சா - ராஜீவ் ராம் இணை, காலிறுதியில் ஜேசன் குப்ளர், ஜேமீ ஃபோர்லிஸ் இணைக்கு எதிராக மோதி 6-4, 7-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த வருடத்துடன் ஓய்வு பெற முடிவெடுத்துள்ள சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு இத்துடன் பிரியாவிடை அளித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...