பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த மாத இறுதியில், ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் அவர் தகவல் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்த கே.எல். ராகுல், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உடற்தகுதியைக் கொண்டு மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 29 முதல் தொடங்கும் டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.