மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவன் 58 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 44 ரன்களும் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 98 ரன்களும் எடுத்தார்கள். மே.இ. தீவுகள் அணிக்கு 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. பிராண்டன் கிங், பூரன் தலா 42 ரன்கள் எடுத்தார்கள். சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி/எல் முறையில் 3-வது ஒருநாள் ஆட்டத்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஷுப்மன் கில் வென்றார்.