ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிர் மருத்துவமனைக்கு வரும் முன்னே பிரிந்திருக்கலாம் என அவருக்கு கடைசியாக சிகிச்சையளித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்ன் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டது. மருத்துவமனை வரும் முன்னே அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என அவருக்கு கடைசியாக சிகிச்சையளித்த தாய் சர்வதேச மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஷேன் வார்னே: ஜெயித்த கதை
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
"அவர் உயிர்பெறச் செய்ய 45 நிமிடங்களுக்குத் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் மருத்துவமனை வரும் முன்னே உயிரிழந்துவிட்டதாகப் பணியிலிருந்த மருத்துவர் தெரிவித்தார். விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு வந்தவுடன், அவருக்கு சிகிச்சையளிக்க அவசர மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தோம். மாலை 4.40 போல அழைப்பு வந்தது. மாலை 5 மணிக்கெல்லாம் மருத்துவக் குழு சென்றடைந்தது.
அவருடன் இருந்தவர்கள் ஏற்கெனவே உயிர்பெறச் செய்வதற்கான சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். எங்களது குழுவும் அதே சிகிச்சையைத் தொடர்ந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலும் சிகிச்சை தொடரப்பட்டது.
உயிர்பெறச் செய்வதற்காக 45 நிமிடங்களுக்கு சிகிச்சையளித்தோம்."