இந்திய இளம் வீரர் பிருத்வி ஷா, பிசிசிஐ நடத்திய உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்தாலும் இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் மார்ச் 5 முதல் மார்ச் 14 வரை நடத்தப்பட்ட உடற்தகுதிக்கான முகாமில் பிருத்வி ஷாவும் கலந்துகொண்டார். ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு வீரர்களுக்கு உடற்தகுதிக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைக் கொண்டு வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்தும் ஆலோசனைகளை பிசிசிஐ வழங்கும்.
இந்நிலையில் மும்பை கேப்டனும் தில்லி கேபிடல்ஸ் அணி பேட்டருமான பிருத்வி ஷா, பிசிசிஐ நடத்திய உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. யோ யோ உடற்தகுதித் தேர்வில் 16.5 ஸ்கோரை எட்டவேண்டும் என்கிற நடைமுறை உள்ளது. ஆனால் பிருத்வி ஷாவால் 15 மட்டுமே ஸ்கோர் செய்ய முடிந்தது. தொடர்ச்சியாக மூன்று ரஞ்சி ஆட்டங்களில் விளையாடியதால் உண்டான சோர்வு காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது. மேலும் இதனால் ஐபிஎல் போட்டியில் பிருத்வி ஷா விளையாடுவதில் எவ்விதச் சிக்கலும் இருக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காயத்திலிருந்து வருபவர்களுக்கு மட்டும் உடற்தகுதியின் அடிப்படையில் மீண்டும் விளையாடுவதற்கான அனுமதி அளிக்கப்படும். வழக்கமான பரிசோதனையில் இந்த நடைமுறை இல்லை. ஒரு வீரர் எந்தளவுக்கு உடற்தகுதியைக் கொண்டுள்ளார் என்பதை அவரும் பிசிசிஐயும் அறிந்துகொள்வதற்காகவே யோ யோ டெஸ்ட் நடத்தப்பட்டதாகவும் பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.
22 வயது பிருத்வி ஷாவை தில்லி கேபிடஸ் அணி ரூ. 7.50 கோடி தொகைக்குத் தக்கவைத்துள்ளது.