லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக இந்தியாவில் இந்த வருடம் நடைபெறுகிறது. செப்டம்பர் 16 அன்று தொடங்கி அக்டோபர் 8-ல் நிறைவுபெறுகிறது. கொல்கத்தா, லக்னெள, தில்லி, கட்டாக், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் 16 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் வருட எல்எல்சி போட்டி ஓமனில் நடைபெற்றது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக சேவாக்கும் இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கெளதம் கம்பீரும் பில்வாரா கிங்ஸ் அணியின் கேப்டனாக இர்பான் பதானும் மனிபால் டைகர்ஸ் அணியின் கேப்டனாக ஹர்பஜன் சிங்கும் தேர்வாகியுள்ளார்கள். இந்த வருடப் போட்டியை இந்தியாவின் 75-வது சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16 அன்று இந்தியா மஹாராஜாஸ் - வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா மஹாராஜாஸ் அணியின் கேப்டனாக கங்குலியும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இயன் மார்கனும் நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ள கண்காட்சிப் போட்டியிலிருந்து செளரவ் கங்குலி விலகியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகப் பணிகளால் இந்த ஆட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள் என்பது தெரியும். மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள். இந்த ஆட்டத்தைக் காண நான் நேரில் வருவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் கங்குலி.