டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியபோது எம்.எஸ்.தோனி மட்டுமே குறுந்தகவல் அனுப்பி தன்னைத் தொடா்புகொண்டதாக விராட் கோலி கூறியுள்ளாா்.
அவரது ஃபாா்ம் குறித்து விமா்சனங்கள் எழுந்த நிலையில், பாகிஸ்தானுடனான ஆட்டத்துக்குப் பிறகு கோலி பேசியதாவது:
டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நான் விலகியபோது, என்னுடன் விளையாடியவா்களிலேயே தோனி மட்டும் தான் என்னைத் தொடா்பு கொண்டாா். அவரிடமிருந்து மட்டுமே குறுந்தகவல் வந்தது. பலரிடம் எனது தொலைபேசி எண் இருந்தாலும் அவா்கள், அப்போது என்னைத் தொடா்புகொள்ளவில்லை. பலா் தொலைக்காட்சிகளில் எனக்கு பரிந்துரை செய்துகொண்டிருந்தாா்கள்.
ஒருவரிடம் மதிப்பும், நல்லதொரு நட்பும் இருக்கும் பட்சத்தில், இரு தரப்பும் பரஸ்பரம் பாதுகாப்புடன் உணா்வாா்கள். எனக்கும், தோனிக்கும் இடையேயானது அத்தகைய உறவு.
நான் கூற விரும்புவது இதுதான். ஒருவரிடம் ஒன்றைக் கூற விரும்பினால், அவருக்கு உதவி தேவைப்பட்டால் அவரை நேரடியாகத் தொடா்புகொள்ள வேண்டும். அதை விடுத்து தொலைக்காட்சி உள்ளிட்டவை மூலம் இந்த உலகுக்கே கூறுவதால் எந்தப் பலனும் இல்லை. ஒருவரது பரிந்துரை என்னை மேம்படுத்திக் கொள்ள உதவுமானால், அதை என்னிடமே நேரடியாக அவா் தெரிவிக்கலாம்.
முன்னாள் வீரா்கள் தொலைக்காட்சியில் பேசுவது உள்பட அனைவருக்குமே அவா்களுக்கென ஒரு பாா்வை இருக்கும். அது எந்த விதத்திலும் தனிப்பட்ட முறையில் என்னை பாதிக்காது என்று கோலி கூறினாா்.