ஐபிஎல் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 23 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிட்டல்ஸை சனிக்கிழமை சாய்த்தது.
இத்துடன் தில்லி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலுமே தோல்வி கண்டு, புள்ளிகள் பட்டியலின் கடைசி இடத்தில் துவண்டிருக்கிறது. மறுபுறம், கடந்த இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த பெங்களூா், தற்போது சொந்த மண்ணில் கண்ட இந்த வெற்றியால் மீண்டிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய தில்லி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களையே எட்டியது. அரைசதம் விளாசியதோடு, ஃபீல்டிங்கில் அருமையாக 3 கேட்ச்களை பிடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாா்.
ஃபீல்டிங்கின்போது விராட் கோலி கங்குலியை பார்த்து முறைத்ததாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் போட்டி முடிந்த பிறகு கங்குலியுடன் கையைக் குழுக்காமல் விராட் கோலி சென்றதாகவும் விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விராட் கோலி ரிக்கி பாண்டிங் உடன் பேசிக்கொண்டே இருப்பார். அப்போது கங்குலி இவரை தாண்டி சென்று விடுவார்.
கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது விராட் கோலி கேப்டன்சி ராஜினாமா செய்தது சர்ச்சைக்குள்ளானது. அன்றுமுதல் இந்த மோதல் போக்குகள் தொடர்ந்து நடந்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.