ஐபிஎல் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை சாய்த்தது.
ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் சோ்க்க, பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களே எடுத்தது.
ஷிவம் துபேவும் அதிரடி காட்டி ரன்கள் சோ்க்க, கான்வேயுடனான அவரது 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 80 ரன்கள் கிடைத்தது.துபே 27 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். ஸ்பின்னர்களை அட்டகாசமாக விளையாடினார். 111 மீ தூரம் சிக்ஸர் அடித்து அசத்தினார். முன்னதாக சமூக வலைதளங்களில் துபே சரியாக ஆடாததால் அவர் மீது விமர்சனங்கள் எழத்தொடங்கியது. போட்டி முடிந்தப் பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி இது குறித்து கூறியதாவது:
இன்னிங்ஸின் பாதியில் ஆட்டத்தில் ரன்கள் குவிக்க துபே மாதிரியான ஆட்கள் தேவை. அவர் துல்லியமாக அடிக்கிறார். வேகப் பந்து வீச்சாளர்களிடம் பிரச்னை இருந்தாலும் ஸ்பின்னர்களை அருமையாக விளையாடுகிறார். அவர் உயரமான பேட்டர்; அதனால் அவரால் ஸ்பின்னர்களை எளிதாக விளையாட முடிகிறது.