இந்திய கிரிக்கெட் அணியில் உடற்தகுதி தேர்வு யோ யோ எனப்படும் தேர்வின் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே இந்திய அணியில் விளையாட முடியும். 6 ஆண்டுகளுக்கு முன்பு இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வினால் அம்பத்தி ராயுடு உள்ளிட்ட பல வீரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆசியக் கோப்பை ஆக.30இல் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி பெங்களூரில் யோ யோ தேர்வினை நடத்தியது. இதில் பங்குபெற்ற அனைத்து வீரர்களும் தேர்சி பெற்றுள்ளனர். 16.1 என்பது குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய பதிப்பெண்ணாக இருந்தது. தற்போது இது 16.5 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் 16.5 முதல் 18.7 வரை மதிப்பெண்களை பெற்றுள்ளார்கள். இதில் அதிகபட்ச மதிப்பெண் 18.7 ஷுப்மன் கில் எடுத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பு வரை விராட் கோலிதான் அதிகபட்ச யோ யோ மதிப்பெண்களை பெறுவார்.
இதையும் படிக்க: உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிருக்கு தங்கம்
ஆனால் தற்போது விராட் 17.2 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஷுப்மன் கில் விராட் கோலியை முந்திவிட்டார். இனிமேல் ஃபிட்டஸ்ட் கிரிக்கெட்டர் என்றால் அது ஷுப்மன் கில்தான் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
வீரர்கள் யோ யோ டெஸ்ட் மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென அறிவுறுத்தியதால் விராட் கோலி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை நீக்கினார்.