வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை எங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும், காயம் அடைந்தவர்களுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இலங்கை அணி வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு குமாரா மற்றும் தில்ஷன் மதுஷங்கா போன்ற முக்கிய வீரர்கள் பலரும் இல்லாமல் களம் காண்கிறது.
இந்த நிலையில், வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை எங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும், காயம் அடைந்தவர்களுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: காயங்கள் ஏற்படுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. துரதிருஷ்டவசமாக, அனுபவமிக்க வீரர்கள் பலரும் அணியில் காயம் காரணமாக இடம்பெற முடியவில்லை. ஹசரங்கா, சமீரா போன்றோர் அனுபவமிக்க வீரர்கள். அவர்கள் அணியில் இல்லை. ஆனால், இலங்கை அணியில் இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த தொடர் சிறந்த அனுபவமாக இருக்கும். ஆசியக் கோப்பையில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் எங்களது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தோம். ஆனால், அதன்பின் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினோம். ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கம் இருக்குமென எங்களுக்குத் தெரியும். ஆனால், உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் இலங்கை சிறப்பாக விளையாடிய வரலாறு உள்ளது என்றார்.