இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை தனது மிகப் பெரிய பயிற்சியாளர் என ஆஸ்திரேலிய வீரர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14) தொடங்கியது. இந்த டெஸ்ட் தொடரில் புதிய சாதனையை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயன் பயணித்து வருகிறார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுக்கவுள்ள சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை நோக்கி அவர் பயணித்து வருகிறார்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: வார்னர் சதம்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை தனது மிகப் பெரிய பயிற்சியாளர் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வினைப் பாருங்கள். அவர் உலகத் தரத்திலான பந்துவீச்சாளர். அவரது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியது முதல் அவரை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். உலகின் பல மைதானங்களிலும் நாங்கள் பலப் போட்டிகளில் விளையாடியுள்ளோம். அவரிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். உங்களது அணிக்கு எதிராக விளையாடும் அணியிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
உங்களை அறியாமலேயே எதிரணி வீரர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அதைப் போல அஸ்வின் எனது பயிற்சியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார். நாங்கள் இருவருமே டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டை நோக்கி முன்னேறி வருகிறோம். நாங்கள் இதனை எங்கு சென்று முடிக்கவுள்ளோம் என்பதைப் பார்ப்போம். எங்களது கிரிக்கெட் பயணம் முடிவடைந்த பிறகு நாங்கள் இருவரும் எங்களது இந்த இனிமையான பயணம் குறித்துப் பேசுவோம் என நம்புகிறேன் என்றார்.
இதையும் படிக்க: கேப்டன், துணைக் கேப்டனை அறிவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 489 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 496 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.