தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 21) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: ஐபிஎல் ஏலத்தில் நாங்கள் கையாண்ட யுக்தி இதுதான்: டு பிளிசிஸ்
தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் ரஜத் படிதாரும், சாய் சுதர்ஷனும் களமிறங்கினர். சாய் சுதர்ஷன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திய ரஜத் படிதார் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. திலக் வர்மா அரைசதம் எடுத்தும், சஞ்சு சாம்சன் சதம் விளாசியும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 52 ரன்களில் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இன்றையப் போட்டியில் சஞ்சு சாம்சனின் சதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் சதமாகும்.
ஆட்டத்தின் இறுதியில் ரிங்கு சிங் சிறிது அதிரடி காட்டினர். அவர் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பியூரான் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், நண்ட்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், லிசாத் வில்லியம்ஸ், வியான் முல்டர் மற்றும் கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.