துபையில் டென்னிஸ் விளையாடிய தோனி - பந்த்!
துபை: துபையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், ரிஷப் பந்தும் டென்னிஸ் விளையாடிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் 2024 போட்டிக்கான மினி ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், பந்த் கேப்டனாக உள்ள தில்லி கேபிடல்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றன.
இந்த ஏலத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் அணியின் நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக துபைக்கு தோனி சென்றிருந்தார்.
அதேபோல், சாலை விபத்தில் காயமடைந்து மீண்டும் உடல்தகுதி பெற்று வரும் தில்லி அணியின் கேப்டன் பந்த் இந்தாண்டு ஐபிஎல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், துபைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஏலம் முடிந்த பிறகும் துபையில் தங்கியிருக்கும் தோனியும், பந்தும் டென்னிஸ் விளையாடும் விடியோ ஒன்று புதன்கிழமை இணையத்தில் வைரலானது.
மேலும், தோனி, பந்த் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.