குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி தாயகம் திரும்பியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு சென்று பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி தாயகம் திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக விராட் கோலி இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு மீண்டும் அணியில் இணைந்துவிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.