இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்ஸீ விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 3 முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க: 2023 - விளையாட்டுத் துறையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வுகள்!
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்ஸீ காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது வேகப் பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்ஸீக்கு காயம் ஏற்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து அவர் விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெரால்டு கோட்ஸீக்குப் பதிலாக மாற்று வீரர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.