ஃபிஃபா கிளப் உலகக் கோப்பைப் போட்டி சவூதி அரேபியாவில் டிசம்பர் 12-22 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ஃபிஃபா கிளப் உலகக் கோப்பைப் போட்டியை ரியல் மேட்ரிட் அணி வென்றது. 2030 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்த சவூதி அரேபியா ஆர்வம் காண்பித்து வரும் நிலையில் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பைப் போட்டி இவ்வருடக் கடைசியில் அப்பகுதியில் நடைபெறவுள்ளது. போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நசார் அணியில் சமீபத்தில் இணைந்தார். இதனால் கால்பந்து வரைபடத்தில் சவூதி அரேபியாவுக்கு முக்கியத்துவம் கிடைத்து வருகிறது.
பிரேஸில், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மொராக்கோ ஆகிய நாடுகள் மட்டுமே ஃபிஃபா கிளப் உலகக் கோப்பைப் போட்டியை இதற்கு முன்பு நடத்தியுள்ளன. ஆறு கண்டங்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள், போட்டி நடத்தும் நாட்டின் அணி என ஏழு அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன. 2025 முதல் இப்போட்டியில் 32 அணிகள் கலந்துகொள்ளும் எனக் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.