தில்லி டெஸ்ட் வெற்றியாளரை முடிவு செய்யும் 2-வது இன்னிங்ஸ்!

ஆஸி. அணி 2-வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. 
டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஆஸி. அணி 2-வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் நேற்று தொடங்கியது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார் புஜாரா.

டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி ஒரு வேகப்பந்து வீச்சாளர், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடமில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கவாஜா 81 ரன்கள் எடுத்தார். ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 13, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று கே.எல். ராகுல் நல்லவிதமாக ஆடுவது போல தெரிந்தாலும் 41 பந்துகளில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லயன் அவருடைய விக்கெட்டை எடுத்தார். இன்று, லயன் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள் இந்திய பேட்டர்கள். ரோஹித் சர்மா 32, ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 100-வது டெஸ்டை விளையாடும் புஜாரா டக் அவுட் ஆனார். முதல் டெஸ்டில் சரியாகப் பந்துவீசாத லயன், இந்த டெஸ்டில் இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். 2-வது நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 

மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. கோலி 14, ஜடேஜா 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கோலிக்கு நல்ல இணையாக 74 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் எடுத்த ஜடேஜா, மர்ஃபி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு கோலியைப் பெரிதாக நம்பியது இந்திய அணி. 84 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழந்தார். குனேமன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். இதை எதிர்த்து டிஆர்எஸ் வழியாக மேல்முறையீடு செய்தார் கோலி. பந்து முதலில் கால்காப்பில் பட்டதா இல்லை பேட்டில் பட்டதாக எனக் குழப்பம் ஏற்பட்டது. எனினும் தொலைக்காட்சி நடுவர் இல்லிங்வொர்த், கள நடுவரின் தீர்ப்பை உறுதி செய்தார். இதனால் கோலி மிகவும் அதிருப்தி அடைந்தார். இதுபோன்ற தருணங்களில் இந்திய அணியைக் காப்பாற்றி வந்தவர் ரிஷப் பந்த். ஆனால் அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள பரத், 6 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 5-வது விக்கெட்டைக் கைப்பற்றினார் லயன். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் - 139/7. இதனால் 175 ரன்களுக்குள் ஆட்டமிழக்கும் அபாயத்தை எதிர்கொண்டது இந்தியா. 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்‌ஷர் படேலும் அஸ்வினும் இந்திய அணியின் இன்னிங்ஸில் திருப்புமுனையை உண்டாக்கினார்கள். கவனமாக ரன்கள் சேர்த்து மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 62 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதன்பிறகும் இருவரும் மேலும் ரன்கள் சேர்த்து இந்திய அணி 200 ரன்களைத் தாண்ட உதவினார்கள். 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அட்டகாசமான அரை சதத்தை அடித்தார் அக்‌ஷர் படேல். இந்திய அணி 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது.

71 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த அஸ்வின், கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அக்‌ஷர் படேல் 74 ரன்களிலும் ஷமி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 83.3 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. அணி 1 ரன் முன்னிலை பெற்றது. லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குனேமன், மர்ஃபி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

2-வது இன்னிங்ஸை நம்பிக்கையுடன் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. தொடக்க வீரர்களாக கவாஜாவும் டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினார்கள். கவாஜா 6 ரன்களில் ஷ்ரேயஸ் ஐயரின் அற்புதமான கேட்சினால் ஆட்டமிழந்தார். ஜடேஜா அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடித்தார். லபுஷேனும் விரைவாக 3 பவுண்டரிகள் அடித்ததால் ஆஸி. அணி ஓர் லட்சியத்துடன் களமிறங்கியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட் 39, லபுஷேன் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸி. அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தில்லி டெஸ்டில் எந்த அணி 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி என்கிற நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com