இந்தியாவின் 80-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 25 வயது விக்னேஷ்.
கடந்த மாதம், இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரனேஷ் பெற்ற நிலையில் அடுத்த மாதமே இன்னொரு கிராண்ட்மாஸ்டரை இந்தியாவுக்குப் பரிசளித்துள்ளது தமிழ்நாடு.
ஜெர்மனியில் நடைபெற்ற 24-வது நார்ட்வெஸ்ட் கோப்பை 2023 போட்டியை வென்ற விக்னேஷ், கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதியையும் அடைந்துள்ளார். விக்னேஷின் அண்ணன் விசாக், 2019-ல் இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். இதன்மூலம் கிராண்ட்மாஸ்டர் ஆன முதல் இந்திய சகோதரர்கள் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் 29-வது செஸ் கிராண்ட்மாஸ்டர், விக்னேஷ். அதாவது இந்தியாவிலுள்ள 80 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 29 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றுவரை ஏராளமான கிராண்ட்மாஸ்டர்கள் நமக்குக் கிடைத்து வருகிறார்கள்.