மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு 173 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது. இதன் அரையிறுதி ஆட்டம் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹேலி, மூனி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். இந்திய வீராங்கனை ராதா யாதவின் பந்து வீச்சில் 25 ரன்களுக்கு ஹேலி ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லன்னிங்குடன் கூட்டு சேர்ந்த மூனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூனி 37 பந்துகளில் அரைசதம் கடந்து 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கிராட்னர் களமிறங்கினார்.
இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சால், லன்னிங் அரை சதம் எடுக்காமல் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிராட்னர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தது. இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.