ரிஷப் பந்த் விபத்து: சாலையைச் சீரமைத்த நெடுஞ்சாலைத் துறை

சாலையில் இருந்த பள்ளத்தைத் தவிர்க்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தன்னை நலம் விசாரிக்க வந்தவர்களிடம்...
ரிஷப் பந்த் விபத்து: சாலையைச் சீரமைத்த நெடுஞ்சாலைத் துறை

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு கார் விபத்து ஏற்பட்ட சாலைப் பகுதியில் சீரமைப்புப் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.

விபத்தை நேரில் பாா்த்த அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை மீட்டு ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா். பந்துக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

படுகாயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் இந்தாண்டின் முதல் பாதியில் அவா் மீண்டும் விளையாட வாய்ப்புகள் மிக குறைவு எனப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி, பிப்ரவரியில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் போன்றவற்றில் ரிஷப் விளையாட மாட்டாா் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தைத் தவிர்க்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தன்னை நலம் விசாரிக்க வந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் ரிஷப் பந்த். உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரிஷப் பந்தை நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரிடமும் இதே காரணத்தைக் கூறியுள்ளார் ரிஷப் பந்த். ஆனால் அவர் கார் ஓட்டியபோது கண் அசந்தததால் தான் விபத்து ஏற்பட்டதாகக் கடந்த வெள்ளியன்று செய்தி வெளியானது. 

இதையடுத்து கார் விபத்து நடைபெற்ற சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விபத்தால் சாலையில் ஏற்பட்ட சேதாரங்களைச் சரிசெய்யவே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய நெடுங்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் பிரதீப் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com