அணியை கேப்டனாக வழிநடத்துவதில் எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் இரண்டு புதிய அணிகள் களமிறங்கின. அதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று. அறிமுகமான முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது. அந்த அணியினை கேப்டனாக ஹார்திக் பாண்டியா சிறப்பாக வழிநடத்தினார். இந்த நிலையில், அணியை கேப்டனாக வழிநடத்துவதில் எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா என அவர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு ஹார்திக் பாண்டியா இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து ஹார்திக் பாண்டியா கூறியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியில் முக்கியமாக எனக்கு தோன்றுவது பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவுடன் இணைந்து செயல்பட்டது தான். எனது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார். அதற்கு காரணம் எங்கள் இருவரின் மனநிலை தான். நாங்கள் இருவரும் வேறு வேறு மனிதர்களாக இருக்கலாம். ஆனால், கிரிக்கெட் குறித்த எங்களது சிந்தனை ஒரே மாதிரியாக இருந்தது. நான் அவருடன் இருந்ததால் அது எனது அணியைக் கேப்டனாக வழிநடத்தப் பெரிதும் உதவியது. அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் எனக்கு என்ன தெரியுமோ அதனை சரியாக செய்ய உதவியது. எனக்கு என்னைப் பற்றி ஏற்கனவே தெரிந்த விஷயங்களை மேலும் பலப்படுத்திக் கொண்டேன். அது கண்டிப்பாக எனக்கு உதவியது என்றார்.
இதையும் படிக்க: 'இருள் ஆளப்போகிறது': டிமாண்டி காலனி 2 படத்தின் அறிமுக விடியோ!
ரோஹித் சர்மா அணியில் இல்லாத சூழலில் இந்திய அணியை ஹார்திக் பாண்டியா வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.