2023 மகளிர் ஐபிஎல் போட்டியின் 2023-2027 காலக்கட்டத்துக்கான ஊடக உரிமையை வையாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் அதிகத் தொகைக்கு இந்த உரிமையை வையாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆடவர் ஐபிஎல் போட்டியின் 2023 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டிஜிடல் ஒளிபரப்பின் உரிமையை ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் ரூ. 23,758 கோடிக்குப் பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக ஒளிபரப்பானது. இதேபோல ஐபிஎல் 2023 போட்டியையும் இலவசமாக ஒளிபரப்ப ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையையும் ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ரூ. 951 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ. 7.09 கோடி. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் (தொலைக்காட்சி, டிஜிடல்) பொருந்தும்.
2023 மகளிர் ஐபிஎல் போட்டியில் 5 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. ஜனவரி 25 அன்று அணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. மார்ச் மாதத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.