பந்துவீச்சாளர் முனையில் பந்துவீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வதை ஆதரிக்கிறேன். ஆனால் நான் செய்ய மாட்டேன் என அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. ஆர். அஸ்வின், தீப்தி சர்மா ஆகியோர் அதுபோல ரன் அவுட் செய்து பலத்த சர்ச்சைகளுக்கு ஆளானார்கள். இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் கேப்டன் தசுன் ஷனகாவை இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி, பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்தபோதும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதனை மறுத்து பேட்டருக்கு மறுவாய்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்வது பற்றி சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்வதை நான் ஆதரிக்கிறேன். அது விதிமுறையில் உள்ளது. கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் என்று கூறுபவர்களின் கருத்தை நான் ஏற்கமாட்டேன். அதேசமயம், தனிப்பட்டமுறையில் நான் இதைச் செய்யமாட்டேன். ஏனெனில் ஓடோடி வந்து பந்துவீச முயலும்போது திடீரென அதை நிறுத்தி ரன் அவுட் செய்ய முடியாது. அதற்குக் கடினமாக முயற்சி செய்யவேண்டும். என் ஆற்றலை அதற்காக வீணடிக்க மாட்டேன். ஆனால் வேறு யாராவது அதைச் செய்தால் அச்செயலுக்கு ஆதரவளிப்பேன் என்றார்.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் கோவா அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி வருகிறார்.