இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 12) தொடங்கியது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அபார பந்துவீச்சால் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாம் நாளில் மெதுவாக ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித், ஜெய்ஸ்வால் இருவருமே சதமடித்து அசத்தினர். ரோஹித் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்த்த கில் 6 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.
இதையும் படிக்க: தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை!
இரண்டாம் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 143* (350), விராட் கோலி 36* (96) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். மொத்தமாக 312/2 ரன்கள் எடுத்து இந்திய அணி மிக வலுவான நிலையில் உள்ளது. மே.இ.தீவுகள் அணியை விட இந்திய அணி 162 ரன்கள் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் சாதனைகள்:
350
அறிமுகப் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார் ஜெய்ஸ்வால். மேலும், அறிமுகப் போட்டியில் இந்தியாவிற்காக அதிக பந்துகளை (350) விளையாடியவர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் அசாரூதின் 322 பந்துகள் விளையாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான் அறிமுகப் போட்டியில் 187 அடித்ததே இந்தியாவின் அறிமுக வீரரின் அதிகபட்ச ரன்களாக உள்ளது. இந்த சாதனையையும் ஜெய்ஸ்வால் முறியடிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
8500
விராட் கோலி டெஸ்டில் 8500 ரன்களை கடந்துள்ளார். டெஸ்டில் இதுவரை இந்தியாவிற்காக 5 பேட்டர்கள் 8,500 ரன்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
229
தொடக்க வீரர்கள் மெ.இ.தீவுகள் அணிக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்ததும் (229 ரன்கள்) இதுவே முதல்முறை. இதற்குமுன் 2006இல் சேவாக்- வாசிம் ஜாபர் ஜோடி 159 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
81
விராட் கோலி தனது முதல் பவுண்டரி அடிக்க 81 பந்துகள் எடுத்துக் கொண்டார். பவுண்டரி அடித்தும் கையை உயர்த்தி கொண்டாடினார்.