ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் சதமடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடி வருகிறது.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 58 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா - கில் 74 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.
இளம் வீரர் ஷுப்மன் கில், பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் 90 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 65, புஜாரா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ரன்கள் எடுப்பது சிரமமாக இருந்தது. கூர்மையான பந்துவீச்சும் ஸ்மித்தின் தலைமைப்பண்பும் இந்திய பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. இதனால் நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள் ஷுப்மன் கில்லும் புஜாராவும். 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுக்க 219 ரன்கள் தேவைப்பட்டன.
மிகவும் கவனமாக விளையாடிய ஷுப்மன் கில், 194 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 2-வது டெஸ்ட் சதம்.
121 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த புஜாரா, மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி, 62 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.