லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தோஹாவில் மார்ச் 10 அன்று தொடங்கிய இந்தப் போட்டி, மார்ச் 20 அன்று நிறைவுபெறுகிறது. ஆசியன் லயன்ஸ், இந்தியா மஹாராஜாஸ், வேர்ல்டு ஜெயண்ட்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்றுள்ளன.
தோஹாவில் நேற்று நடைபெற்ற இந்தியா மஹாராஜாஸ் - வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா, 41 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் ரெய்னாவிடம், லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நீங்கள் விளையாடியதைப் பார்த்த பலருக்கும் நீங்கள் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாட வேண்டும் எனத் தோன்றுகிறது எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, நான் சுரேஷ் ரெய்னா, சாஹித் அஃப்ரிடி அல்ல. நான் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று சொல்லி சிரித்தார்.