தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 87 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்களிலும், அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். ஒருநாள் போட்டியில் இது விராட் கோலியின் 49-வது சதமாகும். இறுதியில் ஜடேஜா அதிரடி காட்ட இந்திய அணி 300 ரன்களைக் கடந்தது. விராட் கோலி 101 ரன்களுடனும், ஜடேஜா 29 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: பிறந்தநாளில் சதம் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி, மார்கோ ஜேன்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் மற்றும் ஷம்சி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.